Saturday, April 9, 2011

'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' 3



சேலம் தமுஎகச 6.4.11 அன்று நடத்திய 'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகளில் ஒன்று.

 ஏழை வீட்டு அடுப்புகள்
நீர் குளிக்கின்றன
 வயிறுகள் தீக் குளிக்கின்றன
 வணிக சூதாடிகளால்
 எங்கெங்கோ பதுக்கப்பட்டிருந்தன
 உணவுப் பொருட்கள்

 வெங்காயத் தோலை உரிக்காமலேயே
 கண்ணீர் வடித்தனர் பெண்கள்

 இஞ்சி, மஞ்சள், தங்கம்
 மூன்றுக்கும் ஒரே நிறம்
 அதனால் ஒரே விலை

 பொங்கலுக்கு
 முந்திரியையும் ஏலத்தையும்
 முகர்ந்துதான் பார்த்தோம்
 கட்டணம் வசூலித்தார்கள்

 மன்னர்களின் ஆக்கிரமிப்புத் தீ 
 மனிதர்களை, வீடுகளை, விளைநிலங்களை
 பொசுக்கியது
 மனுவின் வர்ணத் தீ
 உழைக்கும் மக்களை
 இழிசனர் ஆக்கி எரித்தது

 வைதீக வேள்வித் தீ
 பகுத்தறிவைச் சுட்டது

 பண்ணைகளின் ஆதிக்கத் தீ
 கூலிகளைக் குடிசைகளோடு கொளுத்தியது

 ஆண் பிணங்களுக்கு வைத்த தீ
 உயிருடன் பெண்களையும்
 உடன்கட்டையில் வேகவைத்தது

 முதலாளிகளின் சுரண்டல் தீ
 தொழிலாளர்களின் குருதியை வறுத்தது

 ஊழல் தீ
 எங்கள் வளத்தையும் வாழ்வையும்
 சாம்பலாக்கியது

 பதவியேற்ற அமைச்சர்கள்
 ஓராண்டிற்குள் கொள்ளையடித்த பணத்திற்குக் 
கொள்ளி வைத்தால்
 சாம்பலாக ஐந்தாண்டுகளாகுமாம்

 தணியவில்லை சுதந்திர தாகம்
 கிடைக்கவில்லை உரிமை வாழ்வு

 உழைத்து உண்பதே
 தன்மானம்
 உழைக்காமல் தின்பது
 அவமானம்

 நாட்டின் செல்வத்தை
 பாடுபட்டோருடன் பகிர்ந்துகொள்வதே
 பகுத்தறிவு
 ஒரு சிலர் கவர்ந்து செல்வதோ
 திருட்டறிவு

 இரண்டாம் உலகப் போர் காலம்
 சேலத்தில் ஆங்காங்கே
 கஞ்சித் தொட்டிகள்
 'குடிக்க கஞ்சி வேண்டாம்
 நெசவுக்கு நூல் வேண்டும்'
 நெசவாளர் முழங்கிய
 பூமி இது

 நாங்கள் வேண்டுவது:
 தகுதிக்கேற்ற வேலை
 தேவைக் கேற்ற ஊதியம்
 ஊழலும் லஞ்சமும்
 இல்லா நிர்வாகம்
 -
இலா.வின்சென்ட் சேலம்









Wednesday, April 6, 2011

'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' 1


சேலம் மாவட்ட தமுஎகச 6.4.11 அன்று நடத்திய 
'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' கவியரங்கத்தில்
                   வாசிக்கப்பட்ட கவிதைகளில் ஒன்று





இந்திய வரைபடத்தில்
ஒரு தார்ப்பாலை மட்டும்தான்
எரிந்து கொண்டிருக்கின்றது....


ஆனால்,
வரைபடத்திலே சேர்க்கப்படாத
எத்தனையோ வயிறுகள்
தார்ப்பாலையாய் தினந்தினம்
எரிந்து கொண்டிருக்கின்றன...

எரிகின்ற வயிறுக்கு
எரிசாராயம் 
ஊத்துகிறார்கள்..

விழிக்காத அடுப்புக்கோ
தூக்க மாத்திரை 
ஊட்டுகிறார்கள்....


வாழ்க்கைக்கு எதிர்காலமாய்
தூக்கு மேடையைக் காட்டுகிறார்கள்...


விலைவாசி 
உறிஞ்சி உறிஞ்சி எங்களை
தீக்குச்சியாக்கியது
பரவாயில்லை
ஒரு துளி வெளிச்சமாவது
கிடைக்குமே?


ஆனால்,
உரசுவதற்கு வத்திப் பொட்டி கூட
வாங்க வக்கில்லாததாக
வாழ்க்கை ஆகிவிட்டதே? 


குபேரனே குழந்தையை
பள்ளியில் சேர்த்தால் கூட
குண்டி மூட 
கோவணம் கூட 
மிஞ்சாது...


குண்டி தெரியும்
கோவணம் வைத்துக் கொண்டு
குழந்தையை எப்படி
பள்ளியில் சேர்ப்பது?


அரசு போடும் அரிசி
அண்டை மாநிலத்தில்
அழகு சாயம் பூசி
வெளி மாநில நடிகை போல்
திக்கித் திக்கித் தமிழ் பேசி
திரும்பி வருகிறது
தொண்டையில் 
விக்கிக் கொள்ளும் விலையில்!


சிங்கத்தையும் புலியையும்
வென்றிட்ட என் வம்சம்
காக்கையையும் குருவியையும்
நாயையும் நரியையும்
வேட்டையாடுகிறது
சரித்திரம் செய்வதற்கு அல்ல;
சமைத்து சாப்பிடுவதற்கு...


அதுவும் கிடைக்காதபோது...


முதல் முழுங்கு தண்ணீரில் குழம்பையும்
மறு முழுங்கு தண்ணீரில் ரசத்தையும்
அடுத்த முழுங்கு தண்ணீரில் பாயாசத்தையும்
பிரித்து பார்க்கும் பகுத்தறிவு இருக்கிறது...


தண்ணீரை விட
வெளி மாநிலம் போல்
தொண்டையும் மறுக்கும் போது
பட்டினி கிடக்கும்
பட்டறிவு இருக்கிறது...


சோத்துக்கு வழியில்லை
சமைப்பதற்கு அடுப்பு இலவசம்
கரண்டு வாங்க வழியில்லை
கலர் டீவி இலவசம்
மாடு வாங்க வழியில்லை
சாட்டை இலவசம்...
இலவசங்களில் வாழ்க்கை
இளைத்துப் போய்விட்டது


ஒரு வழியாக
இலவச மாப்பிள்ளை கூட 
வாங்கி விட்டோம்
(மண)மகளுக்கு


மாட்டை விற்றும்
மாங்கல்யம் வாங்க முடியாமல்
மஞ்சளோடு 
வாழா வெட்டியாய்
நிற்கிறது கயிறு!


பருவத்தில் பூப்பெய்தும்
பெண்களின் உடலில்
பெண்ணின் வாசனையைத் தவிர 
எந்தப் பூவின் வாசனையும்
அடிப்பதே இல்லை
விலை கொடுத்து பூ
வாங்க முடியாததால்...


திருமண காலத்துப் பெண்களின்
கன்னம் சிவப்பதில்லை
ஆசை எண்ணங்களால்..
திருமணம் நடத்த முடியாத
அவதியில் சிவந்து கிடக்கின்றன
பெற்றோர்களின் கண்கள் மட்டும்


எப்படியோ திருமணம் முடிந்தாலும்
மசக்கை காலத்தில்
சாம்பலுக்குப் பதில்
பெண்கள்
மண்ணைத்தான் தின்கிறார்கள்..


சாம்பல் கிடைக்கவில்யை£?
கொஞ்ச காலமாய் அடுப்பு
மலடாகப் போனதா?


இல்லை


இலவச அரிசியை எண்ணி 
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டதா? 


மானிற விலையில்
மண்ணென்ணை
மாதம் 200 லிட்டர்
அது உங்கள் கணக்கு

மானிய விலையில்
மரணம்
மாதம் 400
இது எங்கள் கணக்கு


இரைக்கு மீன் படிக்க 
கடலுக்குச் சென்றால்
மீன்களுக்கு அவனே 
இரையாகின்றான்....


அவர்கள் பிடித்த மீன்களை
சுட்டுப் பார்த்தைவிட
அவர்களைச் சுட்டுப் பார்த்த
குண்டுகளை நாங்கள்
தொட்டுப் பார்த்தே அதிகம்


உலகக் கோப்பையில் மட்டுமல்ல
ஊழல் கோப்பையிலும்
நமக்குத்தான் முதலிடம்

அதில் குறைந்தபட்சம்
ஒரு கோடி லாபம்
இதில் ஆளுக்கு 
ஆயிரம் கோடி
இல்லை இல்லை
லட்சம் கோடி லாபம்!


-சு.சரவணன்
கல்லூரி மாணவர், சேலம்

'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' 2


சேலம் மாவட்ட தமுஎகச 6.4.11 நடத்திய
'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' கவியரங்கத்தில்
                  வாசிக்கப்பட்ட கவிதைகளில் ஒன்று.







வானளந்து பறக்கின்ற
வர்ணக் கொடிகளில்
ஏன் திடீரென்று தலைகுனிவு


கந்தலுக்குள் மானம் மறைத்த
சோழனின் வாரிசு பார்த்தா


இல்லை


இரு கைகளில் பசி மறைத்த
பாண்டியன் பரம்பரை பார்த்தா


வான் தொட்டார் என்பார்
வான் கடந்து
சொர்க்கமும் தொடுவார் என்பார்
என்னையும் 
உன்னையும் போல்
கைகட்டி வாய் பொத்தி நின்றால்
சொர்க்கம் கடந்து
புது உலகு அமைப்போம் 
என்பார்


கைவசம் கொண்ட 
காணி நிலத்திலேயே
காணவில்லை பசுமையை
பிறகு நமக்கென்ன கேடு
சொர்க்கத்துக்கு


வானமும் பொழியவில்லை
பூமியும் விளையவில்லை
கேட்ட கட்டபொம்மனும்
இருந்திருந்தால்
விதித்திருப்பானோ வரியை-
வெங்காயத்துக்கும் வெள்ளைப் பூண்டுக்கும்


அன்று 
வெள்ளையன் போட்டான் வரியை
நாம் பிடித்தோம் கொடியை

இன்று
இவரே விதிக்கிறார் வரியை
இவரே பிடிக்கிறார் கொடியை

என்ன வேடிக்கை


கடல் கடந்த தமிழ் மறவன்
மண்ணளந்தான்
பொன்னளந்தான்
முன்னின்ற எதிரியின் பயத்தில்
இவன் நெஞ்சுரம் அளந்தான்


இன்று 
ஒரு சாண் வயிற்றுக்காக
கடலளந்தான்
தன் உயிர் அளக்கின்றான்
ஒவ்வொரு நொடியும்


கைகூட அளந்துதான்
எடுத்தது சோற்றை
அழுத குழந்தைக்கு ஊட்ட


என்ன மாயமோ மந்திரமோ
கை சிறுத்து விட்டதோ-
இல்லை இல்லை
கை சிறுக்கவில்லை
உலைதான் பெருகவில்லை


வேறு திக்கில்லை
ஆண்டவனைத் தவிர

அவனையும் அடைத்துவிட்டார்
கூண்டுக்குள்
முன்பதிவுக்கும் நுழைவுச் சீட்டுக்கும்


உணவுக்காய் ஏங்கும்
ஏழைக் குழந்தைக்கு
உமது வாங்கு வங்கியின் நிதி
மூன்று நாள் சோறு-
மீதி நாள் எங்கு போகும்
வீதிக்கா?


புரிகிறது
இது என்ன புதிதா
என்று கேட்கிறீர்
புதிதல்லைதான் உமக்கு

கண்ணீருக்குள்
உயிர் உறைந்து
துடிக்கிறதே தாயுள்ளம்
பழையதை மாற்ற
என்ன செய்யும் அது?


அவள் வயிறு எரிகின்றது
அடுப்பு உறங்குகின்றது.


-விஜயங்கா முருகதாஸ்
கல்லூரி மாணவி, சேலம்